Search This Blog

Saturday 7 June 2014

இந்தியாவில் கிறிஸ்தவம் தோன்றிய வரலாறு


யூதர்களின் வருகை:
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இந்தியாவில் யூதர்கள் குடியேறினர் என வரலாறு சொல்கிறது. சாலமோன் ராஜா காலத்தில் இஸ்ரவேல் தேசத்தை விட்டு வந்த இந்த யூதர்கள் இந்திய மண்ணில் வசிக்க தொடங்கினர். அக்காலத்தில் கிரேக்கர்கள், ரோமர்களோடு சேர்த்து இந்த யூதர்களையும் 'யவனர்கள்' என இந்தியர்கள் அழைத்த‌னர். மத்திய கிழக்கு தேசங்கள் பலவற்றுடன் பாரதம் அன்றே வணிக உறவு கொண்டிருந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வணிகத்திற்காக வந்த இந்த யூதர்கள் பெரும்பாலும் கேரளாவில் வசித்து வந்தனர்.


தோமாவின் வருகை:
பல கிறிஸ்தவ தேசங்களை சென்றைடையும் முன்பே, இயேசு கிறிஸ்துவின் அன்புச் செய்திகள் இந்தியாவை வந்து சேர்ந்தது. இயேசு உலகிற்கு செய்ய வேண்டிய தன் நற்தொண்டுகளை நிறைவேற்றிய பின்பு, பரமேறிச் சென்றார். கர்த்தர் பரலோகத்திற்கு சென்ற பிறகு, அவரது சீடர்கள் கர்த்தரின் நற்செய்தியை உலகிற்கு அறிவிக்கும் புனிதப்பணியில் ஈடுபட்டனர். அப்போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை பற்றி "தோமாவின் திருப்பணிகள்" என்ற பழங்கால் நூல் (கி.பி 300) இவ்வாறு கூறுகிறது.

ஒவ்வொருவரும் எப்பகுதிக்கு சென்று நற்செய்தி அறிவிக்க வேண்டும் என அவரது சீஷர்கள் தங்களுக்குள் சீட்டுப் போட்டனர். அப்போது இயேசுவின் பன்னிரு சீடர்களுள் ஒருவரான‌ தோமாவின் பெயருக்கு இந்தியா விழுந்தது. ஆனால், இந்திய தேசம் தனக்கு எவ்விதத்திலும் ஒத்து வராது, தன்னால் இந்தியாவிற்கு நற்செய்தி அறிவிக்க செல்ல முடியாது என தோமா மறுத்தார். சீஷர்கள் எவ்வளவு வற்புறுத்தியும் தோமாவின் பிடிவாதம் மாறவில்லை. இறுதியாக இயேசுவே அவருக்கு காட்சி அளித்து அவரை இந்திய மண்ணிற்கு புறப்பட்டு செல்லுமாறு கூறுகிறார். அதற்கும் தோமா, "ஆண்டவரே, நீர் அனுப்ப விரும்பும் வேறு எந்த தேசத்திற்கும் என்னை அனுப்பும், ஆனால் இந்தியாவிற்கு மட்டும் என்னை அனுப்ப வேண்டாம்" என வேண்டினார். எனவே, இந்தியாவிற்கு நற்செய்தி அறிவிக்கும் பணி தடைப்பட்டு போகிறது. ஆனால் கர்த்தர் தோமாவின் மனதை பண்படுத்த ஒரு சின்ன நாடகத்தை அரங்கேற்றுகிறார். ஒரு நாள், இந்திய வியாபாரி ஒருவன் மத்திய கிழக்கு பக்கம் வந்து, தனக்கென ஒரு தச்சனை விலைபேச சந்தைக்குள் நுழைந்தான். அங்கு தோமாவும் உலாவி வந்தார். அப்போது இந்திய வியாபாரி முன், மனித உருவில் காட்சியளிக்கிறார் இயேசு. இருவரும் பேரம் பேச தொடங்கினர். தனக்கு தெரிந்த நல்ல தச்சன் ஒருவன் உள்ளதாகவும், அவன் தனக்கு கீழ்ப்பட்டவன் என்றும் கூறிய இயேசு, தோமாவை காட்டினார். அதனை ஏற்ற இந்திய வியாபாரியும் சில வெள்ளிக் காசுகளைக் கொடுத்து இயேசுவிடம் இருந்து தோமாவை விலைக்கு வாங்கினான். விலைபேசி முடிந்த உடன், தோமாவை நோக்கி சென்ற வியாபாரி, அவரது எஜமானிடம் இருந்து அவரை விலைக்கு பெற்ற செய்தியை கூறினான். தன்னை விற்றுப்போட்ட அந்த நபர் யார் என நோக்க, வியாபாரி காட்டிய திசையை நோக்கி திரும்பினார் தோமா. அங்கு கர்த்தர் நின்று கொண்டிருந்தார். அவர் இயேசு தான் என அறிந்தவுடன் "ஆம், நான் அவருக்கு அடிமை தான்" என தோமா ஒப்புக் கொள்கிறார். உடனே அந்த வியாபாரியும் அவரை இந்தியாவிற்கு அழைத்து செல்ல கப்பல் ஏற்றினான். இவ்வாறு, தோமாவின் வருகை இந்தியாவிற்கு நிகழ்கிறது.

அதன் பின்பு, அவர் குனதோபாரசு என்ற இந்திய பார்த்திய அரசனிடம் கொண்டுவரப்பட்டார். அரசருக்கு ஒரு அரண்மையை கட்டும் பணி நடந்தது. அதற்கான தச்சு வேலைகள் தோமாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஆனால், அரண்மனை கட்ட மன்னர் அளித்த கொடைகளை எல்லாம் தோமா தான தர்மத்திற்கும், நற்பணிகளுக்கும் செலவிட, சினமுற்ற மன்னன் அவரை தண்டித்தார். இதன் பின்பும் அவரது நற்பணி தொடர்ந்தது, பல அற்புதங்களை நிகழ்த்தி தான் மெய்யான தேவனிடத்தில் இருந்து வந்த தூதுவன் என நிருபித்து காட்டினார், பல மக்களை அன்பை நோக்கி வழி நடத்தினார். பின்னர், தெற்கு பகுதியை நோக்கி நகர்ந்த தோமா தன் சுவிசேசத்தை அறிவிக்க தொடங்கினார். அப்போது தென் இந்தியாவை மஹாதேவன் என்ற அரசன் ஆண்டுவந்ததாக தோமாவின் திருப்பணிகள் கூறுகிறது. கேரளாவில் அமைந்துள்ள முசிறி துறைமுகத்தில் தான் தோமா தரையிறங்கினார் என்று இந்த நாள் வரை அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். தென் பாரத மக்களிடத்தில் அன்பின் தெய்வமாம் இயேசுவை போதித்து வந்த தோமா ஏழு திருச்சபைகளையும் நிறுவினார். மலங்கரா, கொள்ளம், கொக்கமங்களம், சாயல், பாலையூர், பரவூர், நிறனம் ஆகிய ஊர்களில் இவர் நிறுவிய திருச்சபைகளாக சில தேவாலயங்கள் போற்றப்பட்டு வருகின்றன. பின்பு, குமரி வழியாக தமிழகத்தில் புகுந்த திருவடியார் தமிழ் மண்ணிலும் அன்பை போதித்தார். அக்கால அரச குடும்பத்தினர் சிலரை இயேசுவின் சீஷர்களாக்கிய குற்றத்திற்காக திருத்தூதர் தோமா கொல்லப்பட்டார். அவரது உடல் மயிலாப்பூரில் அடக்கம் செய்யப்பட்டது என அக்கால தென் இந்திய கிறிஸ்தவர்கள் நம்பினர். பின்னர், முதலாம் வாசுதேவரின் ஆட்சியின் போது, திருத்தூதரின் பெரும்பாலான படிமங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு எடிசா என்ற மத்திய கிழக்கு நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என கூறப்படுகிறது. இவை எல்லாம் நெடுங்காலமாக தென் இந்திய கிறிஸ்தவ மக்களிடையே நிலவி வரும் நம்பிக்கைகள்.

சாந்தோம் தேவாலயம்

பாலையூர் தேவாலயம், கேரளம் தோமா நிறுவிய ஏழு சபைகளுள் ஒன்றாக நம்பப்படுகிறது. ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பே இந்திய மண்ணில் கிறிஸ்தவம் வேறூன்றி இருந்தது என வரலாறு சொல்கிறது. இவர்கள் தோமாவழி கிறித்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர். தோமாவழி கிறிஸ்தவர்கள், இந்திய யூதர்கள் குறித்த இச்செய்திகள் எல்லாம் இந்திய மண்ணில் கிறிஸ்தவம் தோன்றிய வரலாற்றின் தொடக்கங்கள்.

இந்திய வேதங்களில் சில நம்பிக்கைகள்:
ஒரு சில கிறிஸ்தவ நம்பிக்கைகள் இந்திய வேதங்களில் காணப்படுகின்றன. (இந்த நூல்கள் பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலால் எழுதப்பட்டதல்ல, இந்து வேதங்களில் கிறிஸ்தவ நம்பிக்கைகள் ஊடுருவி இருந்ததை அறியவே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. இயேசு கிறிஸ்து பற்றி அறிய பைபிளை மட்டும் பயன்படுத்துங்கள்.)

பாவஷ்ய புராணம், பிரதிசர்ஹ பர்வா, 31ஆவது வசனம் - ஈஷ் மூர்த்தி பரப்த நித்ய சுதா சிவாகரி ஈஷ் மஷீஹ் இதிச்சா மாம் நம பிராதிஷ்டதம் - "இறைவனின் அவதாரமவர், நித்தியமானவர், பரிசுத்தமானவர், அன்பானவர், மீட்பர், நம் உள்ளத்தில் நிலைத்திருப்பவர். அவர் பெயர் இயேசு என்கிற கிறிஸ்து."

ரிக் வேதம் 10.125‍‍‍ - "உலகை உருவாக்கி அனைத்து உயிர்களையும் ஆளும் அந்த இறைவன், பாவத்தில் அழியும் மனிதர்களை மீட்க உலகில் வந்தார். புனிதமான, பாவமில்லாத தன் மேனி ஆடையால் சுற்றப்பட்ட வண்ணம் உலகில் உதித்தார்."

ரிக் வேதம் 10.90.7,15 - "பலியாகும் அந்த பரிகாரி, முட்களாலான கிரீடத்தைத் தரிக்க வேண்டும்"

யஜூர் வேதம் 31 - "பலியாகும் பரிகாரிக்கு சோமரசத்தை பருகக் கொடுப்பார்கள்"

சாம வேதம், பகுதி 2, தண்டியா மஹா பிராமணம் ‍- "இறைவனே மக்களை ஆளும் மன்னர், அவர் தமது உடலை தமது மக்களுக்கான பலியாகக் கொடுப்பார், அப்போது அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்"

மஹா பிராமணம் 4.15 - உன் கண்களாலும், செவிகளாலும், சிந்தனையாலும், வார்த்தையாலும் நீ செய்த பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட வேண்டுமானால், இரத்தம் சிந்தப்பட வேண்டும். இல்லாவிட்டால், உனக்கு மன்னிப்பு கிடையாது, அந்த இரத்தம் புனிதமான ஒருவருடையது. இறைவனே நம்மை உருவாக்கியவர், அவரே நமக்கு அரசன், நாம் பாவத்தில் அழிந்த போது, அவரே நமக்காக வந்து, தமது உடலை ஒப்புக் கொடுத்தார்.

பிரஹதரன்யாக உபநிஷிதம் 3.9.28 - பரிகாரியின் கைகளும் கால்களும் மரத்தில் கட்டப்பட்டு இரத்தஞ் சிந்த வேண்டும்.

இயேசுவின் காட்சிகளாக பேசப்படும் சில செய்திகள்:
இந்தியாவில் இயேசு பல காட்சிகளை அளித்துள்ளார் என மக்களால் கூறப்பட்டு வந்தாலும், ஒரு சில செய்திகளே இன்று பரவலாக பேசப்படுகிறது. அதில் சிலவற்றை குறித்து இங்கு காணலாம். இமாலயத்தில் இயேசு காட்சியளித்தாக ஒரு நம்பிக்கை இமாலயத்தில் இயேசு கிறிஸ்து காட்சி அளித்ததாக சில நம்பிக்கைகள் வட இந்தியாவில் நிலவி வருகின்றன. பாவஷ்ய புராணம் என்ற இந்துக்களின் நூல் ஒன்று இதனை கூறுகிறது. அதிலிருந்து சில வரிகளை காணலாம்.

கோ பவானிதி தம் பிரஹா
சஹோவாச்சாமுதான்விதா
ஈஷபுத்ரம் சா மாம் விதி
குமாரி கர்ப சம்பஹவம்
ஆம் ஈஷா மஷீஹ நம
(பாவஷ்ய புராணம், பிரதிசர்ஹ பர்வா,
பகுதி 3, அத்தியாயம் 2, 23ஆவது வசனம்)

பாரதத்தை ஆண்டு வந்த சகாபதி என்ற ஒரு அரசன் இமாலய மலைப்பகுதிக்கு சென்றதாக பாவஷ்ய புராணம் கூறுகிறது. அங்கு வெள்ளை உடை தரித்த ஒரு அழகிய நபரை கண்டான் அந்த மன்னன். தன் எல்லையில் நுழைந்த அவர் யார் என வினவ அருகில் சென்றான். அப்போது அந்த நபர் அவனிடம், "நான் இயேசு என்கிற கிறிஸ்து, கன்னியின் கர்ப்பத்தில் பிறந்த தேவகுமாரன்" என்று அறிவிக்கிறார்.

வேளாங்கன்னி கிராமம்:
நாகப்பட்டினத்தை சேர்ந்த‌ வேளாங்கன்னி தமிழகத்தில் பிரசித்தி பெற்றது தான். இவ்வூரில் மரியாளின் கரங்களில் குழந்தை இயேசு காட்சி அளித்தார் என பரவலாக நம்பப்படுகிறது. வெறுமையான பால் குடத்தை பொங்கி வழியச் செய்து தன் முதல் அற்புதத்தை இயேசு நிகழ்த்தினார். பின்னர், முடமான சிறுவனை சுகமாக்கினார், போர்ச்சுகீசிய மாலுமிகள் சிலரை புயலில் இருந்து காத்தார். இவ்வாறு பல அற்புதங்களை இப்பகுதியில் இயேசு நிகழ்த்தினார் என கத்தோலிக்க மக்கள் விசுவாசிக்கின்றனர்.


சீக்கியருக்கும் காட்சியளித்த பரமன் இயேசு:
சாது சுந்தர் சிங் அவர்களது கதையும் இந்திய மக்கள் பரவலாக அறிந்த ஒன்று தான். சிறு வயது முதலே தீவிரமான சீக்கியராக வளர்க்கப்பட்டவர். ஒரு பாதிரியாரிடம் இருந்து பைபிளை பெற்று ஒவ்வொரு தாளாக தீயிலிட்டு எரித்தார். அந்தளவு கிறிஸ்தவ போதனைகளை வெறுத்தவர் தான் சாது. பின்னர் இவரது வாழ்க்கை இறைவனை தேடும் பணியில் ஈடுப்பட்டது. பல்வேறு வேதங்களை வாங்கிப் படித்தும் வாழ்வின் பொருளை அறியாது திகைத்தார். இறுதியில், வாழ்வையே வெறுத்து தற்கொலைக்கு முயன்ற போது இயேசு அவருக்கு காட்சியளித்தார். இயேசு தனக்களித்த காட்சியை தன் வீட்டாரிடத்தில் சுந்தர் தெரிவித்தும் அவர்கள் நம்பவில்லை. ஆனால், சாது அது முதல் தன் வாழ்வை இயேசுவுக்கு அர்ப்பணித்து வாழத் தொடங்கினார். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியும் இவரது விசுவாசம் குன்றவில்லை. இறுதியில் வீட்டை விட்டே துரத்தும் அளவிற்கு தள்ளப்பட்டார். துரத்தப்பட்ட பின்பு அக்கிராமத்தில் வசித்த ஒரு கிறிஸ்தவரிடம் அடைக்கலம் புகுந்தவர் இரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அப்பொழுது தான், சாதுவுக்கு அவரது வீட்டாரே விஷம் கொடுத்து அனுப்பியிருந்தது தெரிய வந்தது. இருந்தாலும், அவரது உயிர் அன்று பிழைத்தது. எந்த நூலை எரித்தாரோ அதனையே திரும்ப பெற்று கற்கத் தொடங்கினார். பாதிரியார்கள் அணியும் வெள்ளங்கியை விட்டு காவி உடையில் இயேசுவின் போதனைகளை போதிக்க தொடங்கினார். திபத், இமாலய பிரதேசங்கள் போன்ற பல பகுதிகளுக்கு நடந்து சென்று இயேசுவை அடையாளம் காட்டினார். கிறிஸ்துவின் பொருட்டு அடித்து உதைக்கப்பட்டார், அழுகிய உடல்கள் கிடக்கும் ஒரு அசுத்தமான கிணற்றில் தள்ளப்பட்டார், பல்வேறு துன்பங்களை தன் நற்பணியின் போது அனுபவித்தார். ஆனால் இவரது விசுவாசம் மேன்மேலும் வளரவே செய்தது. இயேசுவை போல 40 நாட்கள் உபவாசம் இருக்க இவர் முயன்றது தான் உச்சக்கட்டமாக போற்ற்ப்படுகிறது. பல காலங்கள் அன்பை போதித்து வந்த இவர் என்ன ஆனார் என்றே இன்று தெரியவில்லை. இறுதியாக இமாலய பகுதியில் இவரை கண்டதாக செய்திகள் நிலவுகின்றன.

இவைகளன்றி எண்ணுக்கடங்காத பல காட்சிகளையும் இயேசு இங்கு அருளினார் என நம்பிக்கைகள் நிலவி வருகின்றன.

இந்தியாவை நோக்கி வந்த கிறிஸ்துவின் தூதர்கள்:
இந்தியாவை நோக்கி பல தூதர்களை இயேசு அனுப்பினார். இயேசு கிறிஸ்துவானவர் கொடுத்தனுப்பிய கட்டளைக்காக, தங்கள் உயிரையும் ஈந்து அவர்கள் ஆற்றிய அருட்பணிகள் ஏராளம். தம் திருப்பணிகளால் காலத்தோடு ஒன்றியவர்களாக இன்றும் நம் நினைவில் கல‌ந்துள்ளனர்.

செயின்ட் பிரான்சிஸ்
ஐரோப்பாவை விட்டு இந்தியாவிற்கு வந்த பிரான்சிஸ் பல ஆண்டுகள் பாரத மண்ணில் கிறிஸ்துவை குறித்து பிரசங்கித்தார். இவரால் பல மக்கள் கிறிஸ்துவுக்குள்ளாக இரட்சிக்கப்பட்டனர். பின்னர், தன் பணியை முடித்து கொண்டு பிற நாடுகளுக்கு செல்ல முற்பட்டார். ஆனால், கடல் பயணத்தின் போதே அவர் உயிர் கர்த்தருக்குள் நித்திரையடைந்தது. எனவே, அன்று அவரோடு இருந்த சில சீஷர்கள் ஒரு கடற்கரையில் தரையிறங்கி அவரது உடலை நல்லடக்கம் செய்தனர். பின்னர் பிரான்சிஸ் விட்டுச் சென்ற நற்பணிகளை அவர்கள் தொடர்ந்தனர். இருந்தாலும், பிரான்சிஸ் அவர்களுக்கு தாங்கள் முறையான அடக்க ஆராதனை செய்யவில்லை என்ற உறுத்தல் மட்டும் அவர்களிடம் இருந்தது. எனவே சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் அடக்கஞ் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து அவரது உடலை எடுத்தனர். ஆனால் உடல் சிதையாமல் இருக்கக் கண்டதும் அதனை சீலைகளால் சுற்றி கோவாவிற்கு எடுத்துவந்து அங்கிருந்த தேவாலயத்தில் வைத்தனர். இன்றும் மக்கள் பார்வைக்காக அவரது உடல் கோவா தேவாலயத்தில் உள்ளது.

ஏமி கார்மைக்கேல்
ஏமி கார்மைக்கேல் ஒரு நல்ல பெண்மணி. ஐயர்லாந்தில் பிறந்த இவர் 18ஆவது வயதிலேயே தன் தந்தையை பறி கொடுத்தார். பின்னர், அவரது தேசத்திலேயே கிறிஸ்துவை குறித்து போதித்து பல மக்களை நல்ல வழியில் நடத்தி வந்தார். சிறு வயது முதலே ஆதரவற்ற குழந்தைகள் மேலும், ஏழை மக்கள் மீதும் ஏமியின் மனம் இரக்கங் கொண்டிருந்தது. தன்னோடு சில தோழிகளையும் தோழர்களையும் இணைத்து கொண்டு, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி வந்தார். பின்னர் ஏமிக்கு கர்த்தரின் அழைப்பு வந்தது. ஒரு சுவிசேச கூட்டதோடு சேர்ந்து சீனா, ஜப்பான், இலங்கை ஆகிய தேசங்களில் கிறிஸ்துவின் அன்பை பற்றி போதித்தார். இறுதியாக இந்தியாவிற்கு வந்த ஏமி, பெங்களூர் அருகே ஒரு இல்லம் அமைத்து ஏழை மக்களுக்கு உதவினார். அப்போது விபசாரத்தில் இளம்பெண்களை வற்புறுத்தும் ஒரு மூட நம்பிக்கை அந்த கிராம மக்களிடம் இருந்தது. (இன்னும் இருப்பதாக கூறப்படுகிறது!) இதனை கேள்வியுற்ற ஏமி, அப்பெண்களை காப்பாற்றி வாழ்வாதாரம் அளித்து வந்தார். 55 வருடங்கள் நற்பணியாற்றிய‌ ஏமி பின்னர் கர்த்தருக்குள் சேர்ந்தார். இவரது தூய வாழ்வை மறக்க முடியாது.

வில்லியம் கேரே
இந்தியாவை நோக்கி வந்த இவர் பட்ட பாடுகள் ஏராளம். இவரது திருப்பணியின் ஆரம்பமே கடும் புயலாகத் தான் இருந்தது. நோயால் பாதிக்கப்பட்டு, உடல் பெலவீனமாகி சாக்கடை ஓரத்தில் ஒரு குடிசை அமைத்து படுக்கையில் கிடந்தார். ஆனால், கடவுளது கிருபையால் இவருக்கு ஒரு கிறிஸ்தவ குடும்பத்தின் உதவி கிடைத்தது. உடல் நலம் பெற்றார். பின்னர் அவர்களோடு சேர்ந்து 30 ஆண்டுகள் நற்பணி புரிந்தார். பரிசுத்த வேதத்தை பெங்காளி, சமஸ்கிருதம் உட்பட ஐந்து பாஷைகளில் மொழி பெயர்த்துக் கொடுத்தார். இவை இன்றும் புழக்கத்தில் உள்ளன.

அன்னை தெரசா
அன்னை தெரசா அவர்களின் நற்பணி பற்றி இந்திய மக்களால் மறக்க இயலாது. இயேசுவின் அன்பை தமது நற்செயல்களால் நமக்கு வெளிப்படுத்தி காட்டியவர். ஏழை குழந்தைகளை கண்டெடுத்து இல்லம் அமைத்து அன்போடு அவர்களை பேணி வந்தார். தாய்நாட்டின் விட்டு தம் வாழ்நாள் முழுதும் இந்திய மக்களுக்கே அர்ப்பணித்தவர். நடந்து சென்று, கரங்கள் ஏந்தி, நிதி திரட்டி ஏழை எளியவருக்கு உதவினார். இவரது அருட்பணி இன்றும் நினைவை விட்டு பிரியவில்லை. அமைதிக்கான நோபல் பரிசை இந்தியாவிற்கு பெற்று தந்தார். அன்னை இறந்த போது, அவருக்கு அரசு மரியாதை கொடுக்க மத்திய அரசே துணிந்தது.

கிரஹாம் ஸ்டெயின்ஸ்
இவரை பற்றி நினைக்க நினைக்க கண்கள் கண்ணீர் தான் வடிக்கும். இந்தியாவிற்கு வந்து இயேசுவின் அன்பை அறிவித்தவர். ஒரிசா மாநில ஏழை மக்களுக்கும், தொழு நோயாளிகளுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை ஈந்து நற்பணி புரிந்தார். அவரது உதவிகளை ஒரிசா மக்கள் இன்றும் மறக்கவில்லை. ஆனால், சமூக விரோதிகள் சிலர் ஈவு இரக்கமின்றி அவரை கொன்ற செய்தி நாட்டையே அதிர்ந்து போகத் தான் செய்தது. கிறிஸ்துமஸ் ஆராதனை போது, தீப்பந்தங்களோடு புகுந்து காரில் உறங்கி கொண்டிருந்த கிராஹமையும், அவரது குழந்தைகள் இருவரையும் தீயிட்டு உயிருடன் கொலை செய்தனர். கிறிஸ்துவின் இரத்த சாட்சியாக கிரஹாம் மரித்தார். அப்பகுதி ஏழை மக்கள் அவரை எவ்வளவாய் நேசித்தனர் என்பது அடக்க ஆராதனையின் போது தெரிய வந்தது. அவரது மனைவி கிளாடிஸ் கொலை பாதகர்களை மன்னித்து கிறிஸ்துவின் அன்பை இன்னொரு முறை எடுத்துக் காட்டினார். தன் கணவரின் விருப்பப்படி தொழு நோயாளிகளுக்கு உதவி ஒரு மருத்துவமனையை ஒரிசாவில் கட்டி முடித்தார். பின்னர், கிளாடிஸ், அவர்களது மகள் எஸ்தர் இந்தியாவை விட்டு தாயகம் திரும்பினர். இவர்களது வாழ்வும் நினைவை விட்டு இன்னும் பிரியவில்லை.

சமுதாய மேன்பாட்டிற்கென சில கிறிஸ்தவர்கள் ஆற்றிய பணிகளும் சொல்லலாம். உடன் கட்டை ஏறுதல், குழந்தை திருமணம், தீண்டாமை போன்றவற்றை ஒழிக்கவும் கிறிஸ்து வழிகாட்டினார். இவர்களைப் போல இந்திய மண்ணை தேடி வந்து, கிறிஸ்துவிற்காக உயிரையும் ஈந்த தூதர்கள் ஏராளம்.

கிறிஸ்தவ மக்களின் இலக்கியப் பணி
இவை மறக்க முடியுமா? இந்தியாவிற்கு வந்த கிறிஸ்தவ மக்கள் தாயக மொழிகளால் ஈர்க்கப்பட்டனர். வில்லியம் காரே பைபிளை தாயக மொழிகளில் மொழிப்பெயர்த்துக் கொடுத்தார். இவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டும் மறக்க இயலாது. இத்தாலி நாட்டை விட்டு கிறிஸ்துவின் அன்பை போதிக்க வந்தவர் தான் கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி. தமிழ் மொழியால் ஈர்க்கப்பட்ட இவர் தன் பெயரை வீரமாமுனிவர் என பெயர்மாற்றம் செய்து கொண்டார். திருக்குறளின் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீனில் மொழிப் பெயர்த்தார். இவர் இயற்றிய நூல்களும் ஏராளம். வீரமாமுனிவர் போல, பாதிரியார் ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்துக் கொடுத்தார். இறந்த பின், தன் கல்லறையில் "நான் ஒரு தமிழ் மாணவன்" என எழுதச் சொன்னவர் இவர். இவர்களன்றி வேதநாயக சாஸ்திரியார், கிருஷ்ணப் பிள்ளை போன்ற பல கிறிஸ்தவ மக்கள் இயேசுவின் அன்பை தமிழில் பாக்களாக்கி கொடுத்தனர். தமிழில் முதலாவது அச்சடிக்கப்பட்ட நூல் கூட பைபிள் தான்.

பைபிள் கூறும் இந்திய தேசம்
இந்தியா பைபிளில் சொல்லப்பட்டுள்ளதை எத்தனை மக்கள் அறிந்துள்ளனர்? வேதம் இரண்டு இடங்களில் இந்திய தேசத்தை பெயரிட்டு சொல்கிறது.

எஸ்தர் 1:1 இந்து தேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது.

எஸ்தர் 8:9 சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்து மூன்றாந் தேதியாகிய அக்காலத்திலே தானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்து தேசம் முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது.
இயேசு எவ்வளவு இனிமையானவர்...!

No comments:

Post a Comment