Search This Blog

Thursday 19 January 2012

சங்கீதம் விளக்கவுரை

சங்கீதப் புத்தகம் ஐந்து பாகங்கள் அல்லது பிரிவுகளாக காணப்படுகின்றது. ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் ஸ்தோத்திர வாழ்த்தோடு ஆமென், ஆமென் என்ற வார்த்தைகள் வருவதைப் பார்க்கலாம். ஒவ்வொரு பிரிவிலுமுள்ள கடைசி சங்கீதத்தின் இரண்டு வசனங்களை எடுத்து படியுங்கள். இந்த 5 பாகங்களும் வேதாகமத்தின் முதல் 5 புத்தகங்களை போல காணப்படுகின்றன.

1 - 41 ( படைப்பு)
42 - 72 ( மீட்பு )
73 - 89 ( பரிசுத்தம்)
90 - 106 ( அலைந்து திரிதல்)
107 - 150 ( தேவனைப் போற்றுதல் )

சங்கீத புஸ்தகத்தை எபிரேய மொழியில் “தெஹில்லீம்”(Tehillim) என்று அழைப்பர். இதன் பொருள் “துதியின் பாடல்கள்” என்பதாகும். கிரேக்க மொழிப்பெயர்ப்பான செப்தஜ்வெந்தில் இதனை “ப்சால்மொய்”(Psalmoi) என்று அழைப்பர். இதன் பொருள் “ இசைக் கருவிகளுடன் பாடப்பட்ட பாடல்” என்பதாகும். இலத்தீன் மொழியில் இதன் தலைப்பு “லிபெர் ப் சால் மோரம்”(Liber Psalmorum) என்பதகும். இதன் பொருள் சங்கீதங்களின் புத்தகம் என்பதே.


சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 160 வசனங்களை நிறைவேறின தீர்க்கதரிசனங்களும் ஏறக்குறைய 274 வசனங்களில் இனி நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்களும் உள்ளன.

சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 413 கட்டளைகளும் 97 வாக்குத்தத்தங்களும் 281 ஆசீர்வாதங்களும் உள்ளன.

சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 223 பாவங்களை குறித்து படிக்கலாம்.

தாவீது 73 சங்கீதங்களையும், மோசே 1-ம், சாலமோன் 2-ம், ஆகசாப் 12-ம், ஏமான் 1-ம், ஏத்தான் 1-ம், கோராகின் புத்திரர்கள் 10சங்கீதங்களையும் எழுதி உள்ளனர். மீதமுள்ள 50 சங்கீதங்களின் ஆசிரியர்கள் யாரென்று தெரியவில்லை.

தமிழ் வேதத்தில் 150 சங்கீதங்களும் அவைகளில் 2026 வசனங்களும் உள்ளன.

சங்கீதங்கள் ஏறக்குறைய கி.மி 1500 முதல் கி.மு 450 வரை உள்ள காலக்கட்டத்தில் இஸ்ரவேல், பாலஸ்தீனா மற்றும் பாபிலோனில் வைத்து எழுதப்பட்டதாகும்.

புதிய ஏற்பாட்டில் மட்டும் சங்கீதங்களை 36 தடவை மேற்கோள் காட்டியுள்ளனர், ஆசிரியர்கள்.

சங்கீதம் 119 –ல் ஒவ்வொரு 8 வசனங்களின் மேல் வரும் தலைப்புகளான ஆலேப், பேய்த் போன்றவைகள் எபிரேய மொழியில் உள்ள 22 எழுத்துக்கள் ஆகும்.

தற்போது இருக்கும் 150 சங்கீதங்களும் எஸ்றாவால் தொகுக்கப்பட்டவைகளாகும்.

சங்கீத புஸ்தகத்தில் 5 அதிகாரங்கள் 5 வசனங்களை கொண்டுள்ளது – சங் 15,70,93,100,125.

சமீபத்தில் சவக்கடலிலிருந்து எடுக்கப்பட்ட வேதாகம தோல் சுருள்களில் 151,152,153 மற்றும் 154 ஆகிய 4 சங்கீதங்கள் அதிகமாய் உள்ளன.

“சேலா “ என்கிற வார்த்தை வாத்தியங்களை ஒரு சில விநாடிகள் வாசிக்காமல் நிறுத்தவும், அந்த பாடல் வரியிலுள்ள கருத்துக்களை சில விநாடிகள் தியானிக்கவும் பயன் படுத்தப்படுகிறது.

Sunday 8 January 2012

ரூத்



ஆசிரியர்: சாமுவேல் எனக் கருதப்படுகிறது. ஆனால் இதை உறுதி செய்ய இயலாது.

காலம்: சுமார் கி.மு.1050 க்குப் பின். கி. மு. 1040 - 970 வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது .

அதிகாரங்கள்: 4

மொத்த வசனங்கள்: 85

திறவு கோல் வசனம்: 2:12

எழுதப்பட்ட நோக்கம்: 1. எக்கால சூழலிலும் கர்த்தரை சார்ந்து வாழும் நல்ல முன்னுதாரணங்கள் உண்டு என்பதை உறுதிப் படுத்தும்படி எழுதப்பட்டது.

2.தன்னை நம்பும் எவரையும் எத்தேசத்தாரையும் கர்த்தர் கைவிட மாட்டார் என்ற உண்மையை விளக்கும் வரலாற்று நூல்.

3.தன்னால் படைக்கப்பட்ட எவரையும் தன் மீட்பின் திட்டத்தில் இணைத்துக் கொள்கிறார் ( ரூத் ஒரு மோவாபிய பெண் ) என்பதை இப்புத்தகம் எடுத்துக் கூறுகிறது.

சிறப்புக் குறிப்புகள்: 1. யூத சமுதாயத்தில் பின்பற்றப்பட்ட திருமண ஒழுங்குகளை இப்புத்தகத்தின் வழியாக அறிய முடிகிறது.

2.ரூத் புத்தகம் சுமார் 12 ஆண்டுகளில் நடைபெற்ற வரலாற்றை எடுத்துக் கூறுகிறது.

3.ரூத் வாழ்ந்த காலத்திற்கு பின் சுமார் 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் மேசியாவாக கிறிஸ்து பிறந்தார்.


முக்கிய நபர்கள்: போவாஸ் - தேவன் என் பெலன்
நகோமி - என் இனியவர் (அ) இன்பம்
ரூத் - தோழி (அ) நட்பு

சம்பவ சுருக்கம் :
மோவாபின் சேற்றிலிருந்து மலர்ந்த செந்தாமரை தான் ரூத் என்னும் பெண்.
சுமார் கி. மு. பன்னிரெண்டாம் நூற்றாண்டின் பின் பகுதியில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வாக கருதப்படுகிறது. இதன் நிகழ்வு நியாயாதிபதிகளின் இருண்ட காலம். நியாயாதிபதிகளின் காலத்தில் நடந்த ஒரு குடும்ப நிகழ்வே ரூத் என்னும் நூல். இந்நூல் தாவீதின் ஆட்சிக் காலத்திலும் சாலமோனுக்கு முன்பும் எழுதப்பட்டிருக்க வேண்டும். உறுதியற்ற விசுவாச வாழ்வை காண்பித்த காலங்களில் உறுதியான விசுவாச வாழ்வுக்குரிய எடுத்துக்காட்டாக ரூத்தின் புத்தகம் அமைந்துள்ளது. தேவ பக்தி இல்லாத காலங்களில் பக்தியாய் வாழ்ந்த பெண்ணின் கதை.

ரூத் என்னும் எபிரேய பதத்தின் அரத்தம் திருப்தி / நட்பு / நண்பி / தோழி.
ரூத்தின் நிகழ்வுகள் நடைபெற்ற காலம் இஸ்ரவேலர் கானானை அடைந்து சில ஆண்டுகளுக்குள்ளே நடந்ததாகும் எனலாம். ரூத் புத்தகம் சுமார் 12 ஆண்டுகளில் நடைபெற்ற வரலாற்றை எடுத்துக் கூறுகிறது. போவாசின் தந்தையான சல்மோன், எரிகோவின் வேசியான ராகாப்பை மணம் செய்தவர். (மத்தேயு 1:5).  சல்மோனுக்கும், ராகாபிற்கும் போவாஸ் பிறந்து 50 ஆண்டுகள் கூட ஆகியிருக்காது. நியாயாதிபதிகளின் நூலில் வரும் மோசேயின் பேரனான லேவியன் (நியாய 18:30), ஆரோனின் பேரனான பினெகாஸ் (நியா 20: 28)  ஆகியோர் வாழ்ந்திருந்த காலத்திலேயே ரூத் நிகழ்ச்சிகள் நடந்திருக்க வேண்டும். 

சுதந்திரம்/ சுதந்திரவாளி போன்ற வார்த்தைகள் சுமார் 15 முறை இடம் பெறுகிறது. ரூத் என்ற சொல் 12 தடவைகள் இடம் பெற்றுள்ளது. 

Saturday 7 January 2012

நியாயாதிபதிகள்

இஸ்ரவேலரின் வரலாற்றில் இப்புத்தகம் மிக முக்கிய நிகழ்வுகளை பதிவு செய்துள்ளது. இதனை இருண்ட கால வரலாறு எனவும் கூறலாம். சுமார் கி.மு. 1380 முதல் 1050 வரை நடைபெற்ற நிகழ்வுகள் இப்புத்தகத்தில் உண்டு.


ராஜாக்களின் காலம் வரையிலான நிகழ்வுகள் இப்புத்தகத்தில் இடம் பெறுவதால் கானானின் குடியேற்றத்திற்கும் ராஜாக்களின் காலத்திற்கும் உள்ள தொடர்பு புத்தகமாக கருதலாம்.


ஆசிரியர் : சாமுவேல் எனக் கருதப்படுகிறது.


காலம் : சுமார் கி.மு. 1050 - 1000.


அதிகாரங்கள் : 21.


மொத்த வசனங்கள்: 618.


திறவுகோல் வசனம் : 21:25.


எழுதப்பட்ட நோக்கம்: கீழ்ப்படியாமையின் விளைவை யாராயினும் சந்தித்தே ஆக வேண்டும். ஆனால் மனம் வருந்தி கர்த்தரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் உண்மையான கீழ்ப்படிதலை வெளிப்படுத்தும் எவரையும் கர்த்தர் மன்னிக்கிறார்.


கர்த்தரின் மாறாத மன்னிக்கும் தெய்வ பண்பையும் கீழ்ப்படியாமை எனும் பாவத்தின் விளைவையும் வரலாற்று அடிப்படையில் கற்றுக் கொள்வதற்காக எழுதப்பட்டது.


பகுப்பு:

அதிகாரம் 1,2 : இஸ்ரவேலரின் கீழ்ப்படியாமை

அதிகாரம் 3- 16 : இஸ்ரவேலருக்கு விடுதலை (அ) ஏழு பாவ சுழற்சிகள்

அதிகாரம் 17 - 21 : இஸ்ரவேலரின் வீழ்ச்சி .


சிறப்புக் குறிப்புகள்: கானான் நாட்டில் குடியேறிய இஸ்ரவேலர் கர்த்தரின் கட்டளையை நிறைவேற்றாததால் தம் மக்களை சீர்ப்படுத்த கர்த்தர் அனுமதித்த நிகழ்வுகள் எனக் கூறலாம்.


"கர்த்தரை நோக்கி" என்ற வார்த்தை 12 முறையும், "ஒப்புக்கொடுத்தார்" என்ற வார்த்தை 23 முறையும், "இரட்சிப்பு" என்ற வார்த்தை 7 முறையும் இப்புத்தகத்தில் உண்டு.


கர்த்தர் பயன்படுத்திய நியாயாதிபதிகள் மொத்தம் 13 பேர்:

ஒத்னியல் கி.மு.1353-1303 : நியா 3:7-11.

ஏகூத் கி.மு.1295-1215. : நியா 3:15-30.

சம்கார் கி.மு.- : நியா 3:51.

தெபோராள் & பாராக் கி.மு.1195-1155. : நியா 4:1-5:3.

கிதியோன் கி.மு.1148-1108. : நியா6:1-8:28.

அபிமலேக் கி.மு.1108-1105. : நியா 9:1-57.

யெப்தா கி.மு.1105-1099 : நியா 10:6-12:7 .

சிம்சோன் கி.மு.1085-1065. :நியா 13:1-16:30.


இவர்கள் தவிர தோலா , யாவீர், இப்சான், அப்தோன் ஆகியோரும் நியாயாதிபதிகள் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.


இஸ்ரவேலரின் விடுதலைக்காக மிகச் சிறிய பொருட்களையும் கர்த்தரால் பயன்படுத்த முடியும் என இப்புத்தகத்தின் மூலம் அறியலாம்.


சம்கார் பயன்படுத்திய தாற்றுக்கோல் (கூர்மையான அம்பு) - 3:31.

யாகேல் பயன்படுத்திய கூடார ஆணி 4:21.

கிதியோனுடன் 300 பேர் எக்காளம், வெறும் பானை, தீவட்டி - 7:16.

சிம்சோன் பயன்படுத்திய கழுதையின் தாடை எலும்பு - 15:15.

(படிக்க 1 கொரிந்தியர் 1:27.28)


மேசொப்போத்தமியர் , மோவாபியர், பெலிஸ்தியர், எமோரியர், கானானியர், மீதியானியர், அம்மோனியர், கிழக்கத்தி புத்திரர் போன்ற மக்கள் இஸ்ரவேலரை கானான் தேசத்தில் ஒடுக்கினர்.


இப்புத்தகம் எனக்குக் கூறும் செய்தி என்ன?


கர்த்தர் எப்போதும் எவரையும் மன்னித்து ஏற்றுக் கொள்வார். ஆனால் மனத்திரும்புதல் மிக மிக அவசியம். கர்த்தர் தம் மக்களை சீர்ப்படுத்த எவரையும் எந்த பொருளையும் பயன்படுத்துவார் என்பதில் ஐயமில்லை.


கர்த்தரின் மன்னிப்பையும் கிருபையையும் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. எனவே உண்மையான திரும்புதளையும், உறுதியான அர்ப்பணிப்பையும் கர்த்தர் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

Friday 6 January 2012

யோசுவா

யோசுவாவின் புத்தகம் முதல் பழைய ஏற்பாட்டில் வரலாற்றுப் புத்தகங்கள் எனும் இரண்டாம் பிரிவு துவங்குகிறது. யோசுவா முதல் எஸ்தர் வரை 12 புத்தகங்கள் இப்பிரிவில் அடங்குகிறது.

இப்பிரிவில் முதல் 9 புத்தகங்கள் (யோசுவா முதல் 2 நாளாகமம் வரை) சிறையிருப்பின் காலத்திற்கு முன் எழுதப்பட்டவை எனவும் மீதி உள்ள 3 புத்தகங்கள் (எஸ்ரா முதல் எஸ்தர் வரை) சிறையிருப்பின் காலத்திற்குப் பின் எழுதப்பட்டவை எனவும் கருதப்படுகிறது. இப்பிரிவில் நியாயாதிபதிகள், ராஜாக்கள் இடம் பெறுகின்றனர். இஸ்ரவேலரின் சுமார் 1000 வருட வரலாற்றை இப்பகுதி விளக்குகிறது.

வரலாற்று புத்தகங்களின் முதலாவது இடம் பெற்றுள்ள யோசுவா "வெற்றிகளின் புத்தகம்" என அழைக்கப்படுகிறது.

யோசுவா எனும் பெயருக்கு "யெகோவாவே இரட்சிப்பு" என்று பொருள் படும். யோசுவா என்ற வார்த்தை கிரேக்கத்தில் இயேசு என்ற பெயருக்கு இணையான சொல் எனலாம்.

ஆசிரியர் : யோசுவா என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் 24:29-33 பகுதியை பிரதான ஆசாரியன் எலியேசர் அல்லது அவரது மகன் பினகாஸ் எழுதியிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

எழுதப்பட்ட காலம் : கி.மு.1390 க்கு பின் (கானானின் வெற்றிக்குப் பின்) எழுதப்பட்டிருக்கலாம்.

மொத்த அதிகாரங்கள் :24

மொத்த வசனங்கள் : 658

திறவுகோல் வசனம் :1:11

எழுதப்பட்ட நோக்கம் : கர்த்தரின் வாக்கை விசுவாசத்துடன் ஏற்றுக் கொண்டு முழுமையாய் கீழ்ப்படிந்து செயல்படும் போது வெற்றி நிச்சயம் என்ற உண்மையை கற்றுக் கொடுக்க இந்த வரலாற்று புத்தகம் உதவி செய்கிறது.

பகுப்பு : 1:1 - 5:12 கானானுக்குள் நுழைதல்
5:13 - 12:24 கானானை வெற்றிகொள்ளுதல்
13:1 - 24:33 கானானை பகிர்ந்தளித்தல்

சிறப்புக் குறிப்புகள் : யோசுவா என்ற நபரிடம் நாம் காணும் விசுவாசம், தைரியம், இறை திட்டத்தினை நிறைவேற்றும் உறுதியான கீழ்ப்படிதல் போன்ற நற்பண்புகள் இன்றைக்கு நமக்கு அறைகூவல்களாக உள்ளன.

கீழ்படியும் போது வெற்றியும் (எரிகோ கோட்டை தகர்க்கப்படுதல்), கீழ்ப்படியாமையால் தோல்வியும் (ஆயி பட்டண தோல்வி) உண்டு என்பதை நாம் அறிய முடியும்.

கானான் நாட்டிற்க்கு வேவு பார்க்க சென்ற யோசுவாவின் சரியான் புரிந்து கொள்ளுதலும், தைரியமான விசுவாச அறிக்கையும் மோசேக்கு அடுத்த தலைவராக நியமிக்கப்பட முக்கிய காரணங்களாகும்.

கர்த்தர் தம் வார்த்தையை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவராகவே உள்ளார்என்பதை இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்று நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அற்புதங்கள் யோர்தான் நதியைக் கடந்தது. எரிகோ பட்டணத்தின் சுவர் இடிந்து விழுந்தது, கல்மழை பெய்தது, சூரியனும் சந்திரனும் தரித்து நின்றது.

யோசுவா இப்புத்தகத்தில் 31 ராஜாக்களை வெற்றி கொள்ளுதல்.

"சுதந்தரித்துக் கொள்ளுதல்" என்ற வார்த்தையும், இந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் சுமார் 56 தடவைக்கு மேல் இடம் பெற்றுள்ளது.

பங்கு வீதம் என்ற சொல் சுமார் 22 தடவைக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இப்புத்தகம் முழுமையும் ஒரே சீராக வாசித்து முடிக்க சுமார் 2 மணி நேரம் தேவை.

இப்புத்தகம் கூறுவது என்ன ?

1. யோசுவாவைப் போல, நமக்கும் விசுவாசத்துடன் கூடிய புரிந்து கொள்ளுதல் தேவை. இத்தகைய புரிந்து கொள்தலே கானானை பற்றிய தைரியமான அறிக்கையை யோசுவா மோசேக்கு அளித்தார். எந்த சூழலையும், எந்த நபரையும் இயேசு கிறிஸ்துவுடன் உள்ள விசுவாசத்துடன் கூடிய புரிந்து கொள்ளுதலுடன் அனுகுவோமானால், நாமும் சிறந்த வெற்றி வாழ்க்கையை வெளிப்படுத்தலாம்.

2. கீழ்ப்படிதல் இக்காலக் கட்டத்தில் இன்றைய தலைமுறைக்கு தரப்படும் சவால். நம் கரங்களில் தரப்பட்டுள்ள எழுதப்பட்ட இறை வாக்காகிய வேதத்திற்கு கீழ்ப்படியும் போது எந்த சூழ்நிலையும் பரிசாகவே அமையும்.
3. வேதத்திற்கு கீழ்ப்படியும் எவரையும், தம் திட்டத்தை நிறைவேற்ற கர்த்தர் பயன்படுத்துகிறார் என்பதை யோசுவாவின் வாழ்வு எடுத்துக் கூறுகிறது. கர்த்தரின் கரத்தால் பயன்படும் கருவியாய் வாழ நாம் ஆயத்தமா?

Thursday 5 January 2012

உபாகமம்

இது துவக்க வரலாற்றை நினைவுபடுத்தும் புத்தகம். கானான் பிரயாணத்தில் உருவான புதிய தலைமுறைக்கு எகிப்த்திலிருந்து நடந்த வரலாற்றை திரும்பக் கூறும் புத்தகம். உப + ஆகமம் என பிரித்தால் கூடுதலான புத்தகம் என அழைக்கலாம். ஏற்கனவே எழுதப்பட்டவைகளை மோசே திரும்பக் கூறி இஸ்ரவேலரை கானானுக்குள் செல்ல ஆயத்தப்படுத்தினர்.

ஆசிரியர் : மோசே
எழுதப்பட்ட காலம் : சுமார் கி.மு. 1450- 1410.
மொத்த அதிகாரங்கள் : 34.
மொத்த வசனங்கள் : 959.
திறவுகோல் வசனம் :10:12 -13.

எழுதப்பட்ட நோக்கம் : வாக்கு பண்ணப்பட்ட கானானை சுதந்தரிக்க பழையவைகளை மறவாமல் நினைத்து (4:32) இன்றைய நிலையில் கர்த்தரின் எதிர்பார்ப்பை புரிந்து செயல்படவும் (5:33) கீழ்படிதலில் அர்ப்பணிப்புடன் செயல்பட (28:1,2) வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்டது.

திறவுகோல் வார்த்தை : நினைவு கூறு.

சிறப்புக் குறிப்புகள்: " கேள்" என்ற வார்த்தை சுமார் 66 முறை பயன்படுத்தப்படுள்ளது. புதிய ஏற்பாட்டில் சுமார் 80 முறை உபாகமத்திலிருந்து மேற்கோள்கள் எடுத்து பயன்படுத்தப்படுள்ளன. புதிய ஏற்பாட்டின் புத்தகங்களில் 17 புத்தகங்கள் உபாகமத்தின் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. 'கட்டளை' என்ற சொல் சுமார் 70 முறை உள்ளது. செய், கடைப்பிடி என்ற சொற்கள் சுமார் 177 முறை வந்துள்ளது.

பகுப்பு:
அதி 1-4 : வரலாறு - கடந்த காலத்தில் கர்த்தரின் உண்மை
அதி 5:1-26:15 : போதனை - நிகழ்காலத்தில் கர்த்தரின் கட்டளைகள்
அதி 26:16-34:12 : உடன்படிக்கை - எதிர்காலத்திற்க்குரிய தீர்க்க தரிசன வாக்குறுதி.
அதி 1:1-4:43 முதலாம் அருளுரை - இஸ்ரவேலருக்கு கர்த்தர் செய்தவை.
அதி 4:44 - 26:68 இரண்டாம் அருளுரை - நியாயப்பிரமாணம் குறித்த விளக்கம்.
அதி 29:1 - 30:20 மூன்றாம் அருளுரை - மோசேயின் நிறைவு காலங்கள்.

எனக்குரிய செய்தி :
* துவக்க வரலாற்றை நினைவுபடுத்துங்கள்.
* வேதத்தை கற்போம்! வேதத்தை கற்பிப்போம்.
* வேதத்தை கற்றுக் கொள்வதற்கென சரியான துணை நூல்களை வாங்க திட்டமிடுவோம்.
* உடன்படிக்கையின் கர்த்தருடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றி கர்த்தர் நமக்கு வாக்குப் பண்ணியவைகளை சுதந்தரிப்போமாக!

Wednesday 4 January 2012

எண்ணாகமம்

வேதாகமத்தின் பகுதியாகிய பழைய ஏற்பாட்டின் நான்காம் நூலாக அமைந்தது எண்ணாகமம் ஆகும். இஸ்ரவேல் மக்கள் எண்ணிப் பார்க்கப்ப்படபடியால் இப்புத்தகம் எண்ணாகமம் என அழைக்கப்படுகிறது. லத்தின் மொழியில் "numeri" எனும் வார்த்தையிலிருந்து இத்தலைப்பு உருவானது.

சீனாய் மலையிலிருந்து சுமார் 10 நாட்களின் பயண குறிப்புகளும், அவர்கள் சீனாய் மலையை விட்டுப் புறப்பட்டு, வாக்களிக்கப்பட்ட நாட்டின் கிழக்கு எல்லையை அடைந்ததுவரை நாற்பது ஆண்டுகளாக நிகழ்ந்தவற்றின் தொகுப்பாகும். சீனாய் மலையினின்று புறப்படும் முன்னும் யோர்தானுக்குக் கிழக்கே மோவாபில் ஒரு தலைமுறை கடந்த பின்னும் மோசே செய்த கணக்கெடுப்பின் காரணமாக இந்நூல் இப்பெயரைப் பெறுகிறது.

மேலும் காதேஸ்-பர்னேயாவில் இஸ்ரயேலருக்கு நேர்ந்த இன்னல்களும், அம்மக்கள் கர்த்தருக்கும் மோசேக்கும் எதிராகச் செய்த கிளர்ச்சியும் இந்நூலில் விரித்துரைக்கப்படுகின்றன. ஆயினும் கர்த்தர், மக்கள்மேல் அக்கறைகொண்ட் அவர்களின் குறைகளைப் பொருட்படுத்தாது அவர்களை ஏற்றுக்கொள்ளும் அன்பையும் இந்நூல் எடுத்துக்காட்டுகின்றது. அதுபோன்று, கர்த்தருக்கும் மக்களுக்கும் மோசே உண்மையுடன் பணியாற்றுவது இந்நூலில் சிறப்பிடம் பெறுகின்றது.

ஆசிரியர் : மோசே எனக் கருதப்படுகிறது.
எழுதப்பட்ட காலம் : சுமார் கி. மு 145-1410
மொத்த அதிகாரங்கள் : 36
மொத்த வசனங்கள் : 1288
திறவுகோல் வசனம் : 14:22,23.
நூலின் பிரிவுகள்:1. இஸ்ரயேல் மக்கள் சீனாய் மலையைவிட்டுப் புறப்பட ஆயத்தப்படுதல். - எண்ணாகமம் 1:1 - 9:23
அ) மக்கள்தொகை முதல் கணக்கெடுப்பு. - எண்ணாகமம் 1:1 - 4:49
ஆ) சட்டங்களும் விதிமுறைகளும். - எண்ணாகமம் 5:1 - 8:26
இ) இரண்டாம் பாஸ்கா. - எண்ணாகமம் 9:1-23
2. சீனாய் மலை முதல் மோவாபு வரை. - எண்ணாகமம் 10:1 - 21:35
3. மோவாபில் நிகழ்ந்தவை. - எண்ணாகமம் 22:1 - 32:42
4. எகிப்து தொடங்கி மோவாபு வரையிலான விடுதலைப் பயண நிகழ்ச்சிகளின் சுருக்கம். - எண்ணாகமம் 33:1-49
5. யோர்தானைக் கடக்குமுன் கொடுக்கப்பட்ட கட்டளைகள். - எண்ணாகமம் 33:50 - 36:13

எழுதப்பட்ட நோக்கம் : கர்த்தர் தம் மக்கள் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடப்பதையே எதிர்பார்க்கிறார். அவிசுவாசம் கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அவிசுவாசம் மற்றும் அவிசுவாசத்தினால் உண்டாகும் எதிர்த்து செயல்படுதல் போன்ற பண்புகளினால் ஏற்படும் விளைவுகளை கற்றுக் கொடுக்க இப்புத்தகம் உருவானது.
சிறப்புக் குறிப்புகள் : இப்புத்தகத்தில் இஸ்ரவேலர் இரண்டு முறை எண்ணிப் பார்க்கப்பட்டனர். இருபது வயதுக்கு அதிகமான ஆண் மக்கள் அனைவரும் கணக்கிடப்பட்டனர். 1:46 இன் படி முதல் கணக்கெடுப்பின் படி 6,30,550 பேர் எனவும் இரண்டாம் கணக்கெடுப்பின் படி (26:41) 6,01,730 பேர் என்பதையும் அறியலாம். 38 வருடங்கள் 38 மாதங்கள் நடந்த நிகழ்வுகள் தொகுக்கப்படுள்ளதாக வேத ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். வனாந்தரத்தில் என்ற சொல் 48 தடவைகள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
எனக்குரிய செய்தி : தம் மக்கள் தன் மீதுள்ள விசுவாசத்தை வெளிப்படுத்தி வாழ வேண்டும் என கர்த்தர் எதிர்பார்க்கிறார். ஆனால் அவிசுவாசத்தினால் நம் வாழ்வில் மிகப் பெரிய எதிர்மறையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்ற உண்மையை இப்புத்தகம் கற்றுக்கொடுக்கிறது. அவிசுவாசத்தினால் கர்த்தர் அருளும் நல் ஆசிர்வாதங்களை இழக்க நேரிடும் என்பதை இப்புத்தகம் தெளிவாக கூறுகிறது. கீழ்படிதல் விசுவாசித்தல் இவை தவிர கர்த்தரின் நன்மைகளை பெற்றிட குறுக்கு வழிகள் இல்லவே இல்லை.

Tuesday 3 January 2012

லேவியராகமம்

திருமறையின் 3ம் புத்தகம் இது. இப்புத்தகம் "பிரமாணங்களின் புத்தகம் "என அழைக்கப்படுகிறது. திருப்பணியாற்ற கர்த்தரால் நியமிக்கப்பட்ட லேவியர்கள் குறித்த செய்திகள் அதிகமாக இடம் பெறுவதால் , இப்புத்தகம் லேவியராகமம் என அழைக்கப்படுகிறது. இப்பிரமாணங்களின் புத்தகத்தில் தெய்வ மக்களுக்குரிய கர்த்தரின் எதிர்பார்ப்புகள் மிகத் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

ஆசிரியர் : மோசே என கருதப்படுகிறது.
காலம் : சுமார் கி.மு. 1445 - 1444. (சீனாய் மலையருகே தங்கியிருந்த ஒரு மாத காலத்தின் நிகழ்வுகளின் தொகுப்பு எனலாம் )
மொத்த அதிகாரங்கள் : 27
மொத்த வசனங்கள் : 859
திறவுகோல் வசனம் : 19:2

எழுதப்பட்ட நோக்கம் : திருப்பணிக்கென நியமிக்கப்பட்ட ஆசாரியர்கள் லேவியர்கள் ஆகியோரின் பொறுப்புகள் . இப்பணி செய்வதற்குரிய தெய்வ எதிர்பார்புகளை இப்புத்தகம் உள்ளடக்கியது . மேலும் , இஸ்ரவேலரிடம் காணப்பட வேண்டிய இறை பண்புகளையும் இப்புத்தகம் வலியுறுத்துகிறது.

சிறப்பு குறிப்புகள் : 5 விதமான பலிகள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. 1. சர்வாங்க தகனபலி 2. போஜனபலி 3. சமாதானபலி 4. பாவநிவாரண பலி 5. குற்ற நிவாரண பலி .
இவற்றில் முதல் 3 பலிகளும் காணிக்கையாக செலுத்தப்பட சுகந்த வாசனையான பலிகள் என அழைக்கலாம் . அடுத்த 2 பலிகளும் நம் வாழ்வில் இடம் பெறும் பாவம் , குற்றத்திற்கான பிராயச் சித்தமாக கருதப்பட்டது .

7 பண்டிகைகளைப் பற்றிய குறிப்புகள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன .
1. பஸ்கா பண்டிகை (23:5)
2. புளிப்பில்லா அப்பப்பண்டிகை(23:6)
3. முதற்பலன்களின் பண்டிகை (23:10)
4. பெந்தெகோஸ்தே பண்டிகை (23:16)
5. எக்காளப் பண்டிகை (23:24)
6. பிராயச்சித்த பணடிகை (23:27)
7. கூடாரப்பண்டிகை (23:34)

இப்பண்டிகைகளில் புளிப்பில்லா பண்டிகையும் , கூடரப்பண்டிகையும் ஏழு நாட்கள் கொண்டாடப்பட்டன. பெந்தெகோஸ்தே பண்டிகை அறுவடை பணடிகை எனவும் அழைக்கப்படுகிறது . கர்த்தர் மோசேயை நோக்கி என்ற சொற்றொடர் 28 முறை இடம் பெற்றுள்ளது . இப்புத்தகத்தின் முக்கியமான பரிசுத்தம் என்ற வார்த்தை 87 தடவை இடம் பெற்றுள்ளது . மேலும் பலி 52 முறை , ஆசாரியர் 189 முறை , இரத்தம் 86 முறை பாவநிவாரணம் 45 முறை இடம் பெற்றுள்ளது.

இப்புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் பரிசுத்த வாழ்வுக்கான கட்டளைகள் இடம் பெற்றுள்ளன . குடும்ப உறவுகள் மற்றும் பொறுப்புகள் , பாலியல் சார்ந்த கட்டளைகள் போன்ற முக்கிய நடைமுறை ஆலோசனைகள் உள்ளன . இவை இக்காலத்திலும் மிகவும் பொருத்தமானவை என்பதில் ஐயமில்லை .

பகுப்பு : 1:1-17:16 பரிசுத்த கர்த்தரை ஆராதிப்பது எப்படி ?
18:1-27:34 பரிசுத்தமாய் வாழ்வது எப்படி ?
1:1 - 10:20 கர்த்தரை சென்றடைவது எப்படி ?
11:1 - 27:34 கர்த்தரோடு வாழ்வது எப்படி ?

எனக்குரிய செய்தி :
பரிசுத்த கர்த்தரை ஆராதிக்க நாம் பேறு பெற்றவர்கள் எனலாம் . தம் மக்களின் வாழ்க்கை எப்படி காணப்பட வேண்டும் என்பதை வேதம் தெளிவாகக் கூறுகிறது . கிறிஸ்தவ வாழ்வு நியமங்கட்கு உட்பட்டதாகும். இத்தகைய பிரமாணங்களுக்கு அல்லது கர்த்தரின் எதிர்பார்ப்புக்கு உட்பட்டதாக என் வாழ்வு காணப்படுகிறதா என ஆய்வு செய்தல் அவசியமாகும் . தெய்வ நியமங்களை ஏற்று வாழும் வாழ்வில் மகிழ்ச்சி உண்டு . மேலும் சாட்சி வாழ்வைக் காண்பிப்பதின் வழியாக பிறரையும் இயேசு கிறிஸ்துவின் அன்பிற்குள் அழைத்து வர இயலும் என்பது நிச்சயமே .

Monday 2 January 2012

யாத்திராகமம்

"வெளியேறுதல்" அல்லது "புறப்படுதல் என அர்த்தங்கொள்ளும் கிரேக்க வார்த்தைப்படி யாத்திராகமம் (யாத்திரை + ஆகமம்) என தலைப்பிடப்பட்டுள்ளது. "மீட்பின் புத்தகம்' என அழைக்கப்படுகிறது.

'துவக்கங்களின் புத்தகமான' ஆதியாகமத்தில் கர்த்தரின் நோக்கம் வெளிப்படுத்தப்பட்டது. "மீட்பின் புத்தகமான" யாத்திராகமத்தில் கர்த்தரின் செயல் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆசிரியர் : மோசே என கருதப்படுகிறது.
காலம் : சுமார் கி.மு.1445-1405.
மொத்த அதிகாரங்கள் : 40
மொத்த வசனங்கள் : 1231
திறவுகோல் வசனம் : 3:7,10.

சிறப்புக்குறிப்புகள் : ஆதியாகமதிர்க்கும் யாத்திராகமத்திர்க்கும் இடையே 350 ஆண்டுகளுக்கான நிகழ்வுகள் உள்ளன எனலாம். இப்புத்தகத்தில் 146 ஆண்டு கால நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எபிரேய குழந்தையாய் பிறந்த மோசே, பார்வோனின் அரண்மனையில் இளவரசனாய் வாழ்ந்தார். பின்னர், வனாந்தரத்தில் பயத்துடன் திரிந்த மோசேயை கர்த்தர் சந்தித்தார் ( முட்புதர் அனுபவம் ). கர்த்தரின் எதிர்பார்ப்பை (இஸ்ரவேலரின் விடுதலை) நிறைவேற்ற கீழ்ப்படிந்தார் மோசே. வல்லரசரான பார்வோநிடமிருந்து கர்த்தரின் இரக்கத்தாலும் ஆற்றலாலும் இஸ்ரவேலர் எகிப்தை விட்டு வெளியேற மோசேயை ஆண்டவர் பயன்படுத்தினார்.

பழைய ஏற்பாட்டிலேயே அதிகமான அளவில் அற்புதங்கள் இடம் பெற்ற புத்தகம். 10 வாதைகள் இதில் மிக முக்கியமானவை எனலாம். நம் கிறிஸ்தவ வாழ்விற்கு அடித்தளம் என உறுதியாக கூறலாம்.

முக்கிய கதாபத்திரங்கள் : மோசே, ஆரோன், மிரியம், பார்வோன் .

கர்த்தர் நம் மக்களின் மீது அக்கறை கொண்டவராக, நமக்குரியவைகளை தந்து வழி நடத்துகிறார். கர்த்தர் பரிசுத்தமுள்ளவர். எனவே, கர்த்தரின் பிள்ளைகளும் பரிசுத்த வாழ்வை வெளிப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறார்.

பகுப்பு :
1:1-12:36 - எகிப்தில் இஸ்ரவேலர் - எகிப்தியரின் அடக்கு முறையும் அடிமைத்தனமும்
12:37-18:27 - பயணத்தில் இஸ்ரவேலர் - கர்த்தரின் ஆதரவும் விடுதலையும்
19:1-40:38 - சீனாய் மலையடிவாரத்தில் இஸ்ரவேலர் - உடன்படிக்கை ஆசரிப்புக் கூடாரம் உருவாக்கப்படுதல்.

எனக்குரிய செய்தி :
இப்புத்தகத்தில் வலியுறுத்தப்படும் முக்கிய செய்தி "மீட்பு" என்பதாகும். கர்த்தரை விசுவாசிப்போர் எவரையும் கர்த்தர் விடுவித்து, புது வாழ்வு தருகிறார் (யோவான் 1:12). மீட்கப்படும் மக்கள் இயேசு கிறிஸ்துவை ஆராதிப்போராக வாழ வேண்டும் என கர்த்தர் எதிர்பார்க்கிறார். ஆரதிப்போர் கர்த்தரின் பிரதிநிதிகளாக சாட்சி பகர வேண்டும் என்பதே இறைவனின் திட்டம் ஆகும்.


இவ்வரிசையில் நான் எங்கு இருக்கிறேன்? மீட்பு, புது வாழ்வு, தொழுது கொள்வோர், சாட்சியாக வாழ்வோர் - இத்தகைய அனுபவமும், வளர்ச்சியும் என்னில் இடம் பெற வேண்டும். இத்தகைய விருப்பத்துடனும் தீர்மானத்துடனும் இயேசு கிறிஸ்துவிடம் வரும் எவரும் இம்மேலான அனுபவத்தை பெறுவார் என்பதில் ஐயமில்லை. என் வாழ்வில் இந்த அனுபவம் நிறைவேறியுள்ளதா ?

Sunday 1 January 2012

ஆதியாகமம்

ஆதியாகமம் "துவக்கங்களின் புத்தகம்" என அழைக்கப்படுகிறது. ஆதியாகமம் என்ற பெயர் "செப்துவஜிந்து" எனும் கிரேக்க வேதாகமத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இயற்கை, மனுக்குலம், குடும்பம், பாவம், மீட்பு, மொழி, கலாச்சாரம், தேவ ஜனமாகிய இஸ்ரவேலர் போன்ற துவக்கங்களின் வரலாறு இப்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


மொத்த அதிகாரங்கள் : 50


மொத்த வசனங்கள் : 1533


ஆசிரியர் : "மோசே " என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

எழுதப்பட்ட காலம் : எகிப்திலிருந்து மோசேயின் தலைமையில் இஸ்ரவேலர் புறப்பட்ட காலத்திற்குப் பின், மோசேயின் மரணத்திற்கு முன் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. சுமார் கி.மு.1445 - கி.மு.1405. கற்பனைக்கும் அப்பாற்பட்ட காலத்திலிருந்து, சுமார் கி.மு.1804 ம் ஆண்டு வரையிலான நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன.


ஆதியாகமம் நிகழ்வுகளை 3 காலகட்டங்களாகப் பிரிக்கலாம்.


1) மெசபத்தோமியாவில் நடந்தவை : ஆதி 1-11 - (துவக்கமுதல் (படைப்பு) சுமார் கி.மு.2090 வரை).

2) கானானில் நடந்தவை : ஆதி 12- 36. - (சுமார் கி.மு.2090 முதல் 1897 வரை)

3) எகிப்தில் நடந்தவை : ஆதி 37- 50. - ( சுமார் கி.மு.1897 முதல் 1804 வரை)


எழுதப்பட்ட நோக்கம் : இன்றைய உலகில் நாம் காணும் அனைத்தும் கர்த்தரால் துவங்கப்பட்டவையே என்பதை வலியுறுத்தும் புத்தகம் இது. இன்றும் கர்த்தரின் அனுமதியும் அங்கீகாரமும் இல்லாமல் எதையும் துவங்க இயலாது என்பதை இப்புத்தகம் எடுத்தியம்புகிறது.

சிறப்பாக, கர்த்தரின் திட்டத்தை நிறைவேற்ற தெரிவு செய்யப்பட்ட இஸ்ரவேலரின் வரலாறு இப்புத்தகத்தில் துவங்குகிறது.

பகுப்பு : 1:1-2:3 - படைப்பின் வரலாறு 2:4-5:32 - ஆதாமின் வரலாறு 6:1-11:32 - நோவாவின் வரலாறு 12:1-25:18 - ஆபிரகாமின் வரலாறு 25:19-28:9 - ஈசாக்கின் வரலாறு 28:10-36:43 - யாக்கோபின் வரலாறு 37:1-50:26 - யோசேப்பின் வரலாறு


இப்புத்தகத்தின் முதல் பகுதியில் (1-11 அதிகாரங்கள்) 4 முக்கிய நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. படைப்பு, வீழ்ச்சி, பாவம், ஜலப்பிரளயம், பாபேல் கோபுரம் ஆகியவைகளின் வரலாறுகள் உள்ளன.

ஆதியாகமத்தின் பின் பகுதியில் ( 12-50 அதிகாரங்கள்) 4 நபர்களை குறித்த வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு ஆகிய 4 முற்பிதாக்களின் வரலாறுகள் இடம் பெற்றுள்ளன.


இப்புத்தகம் எனக்கு கூறுவது என்ன?

நம் தேவன் "துவக்கங்களின் தேவன் என்பதை கற்றுக்கொடுக்கிறது. எந்நிலையிலும் கர்த்தரிடம் வரும் எவருடைய வாழ்விலும் புதியவைகளைத் துவங்க இயலும்.

இன்றும், நம் வாழ்வுக்கும், வாழ்வின் ஆதாரங்களுக்கும் "துவக்கம்" கர்த்தரிடத்தில் மட்டுமே உள்ளது என்பதை இப்புத்தகத்தின் வாயிலாகக் கற்றுக்கொள்ள இயலும்.